திருமலை பாறை ஓவியம்
மூலப்பொருள்கள்
திருமலையில் காணப்படும் ஓவியங்கள் எல்லாம் சிவப்பு வண்ணத்தில் மட்டுமே உள்ளன. அவற்றில் அடர் சிவப்பு வண்ணம் மற்றும் வெளிர் சிவப்பு வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை ரெட் ஆக்கர் எனப்படும் சிவப்பு நிற மண் அல்லது கல்லிலிருந்து தயாரிக்கப்படுபவை ஆகும். சிவப்பு ஆக்சைடு வண்ணம் என்பது இரும்பு ஆக்சைடில் இருந்து பெறப்பட்ட சிவப்பு-பழுப்பு அல்லது துரு நிற வண்ணமாகும்.
வண்ணங்கள்
சிவப்பு
காலம்
புதிய கற்காலம், பெருங்கற்காலம்
ஊர்
மாவட்டம்
சிவகங்கை
No data available
கூடுதல் விவரங்கள்
இம்மலையில் சறுக்கும் பாறை (மேற்கு), வடக்குப் பாறை, தென் கிழக்குப் பாறை, தெற்குப்பாறை போன்ற நான்கு இடங்களில் பாறை ஓவியங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை சிவப்பு வண்ணத்தில் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் வரையப்பட்டதாகக் கருதப்படுகின்றன. இவ்விடத்தில் காணப்படும் ஓவியம் ஒன்றில், இரண்டு மனித உருவங்கள் தங்கள் ஒரு கையை மேலே தூக்கியவாறும் மறு கையைப் பக்கவாட்டில் நீட்டியபடியும் காட்டப்பட்டுள்ளன. இவர்களின் உள்ளங்கை விரிந்த நிலையில் உள்ளது. அதனருகே மேலிருந்து கீழாக வளைந்த கோடுகள் காட்டப்பட்டுள்ளன. அவை மலையில் இருந்து விழும் நீர் வீழ்ச்சியைக் காட்டும் விதமாக இருக்கின்றது. இந்த உருவங்களின் உடல் தோற்ற அமைப்பைக் கொண்டு இவை ஆண் மற்றும் பெண் உருவமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவ்வோவியங்கள் அடர் சிவப்பு வண்ணத்தில் உள்ளன. இங்குள்ள மற்றோர் ஓவியத்தில், மனித உருவம் ஒன்று மெல்லிய கோடுகளால் சிவப்பு வண்ணத்தில் வரையப்பட்டுள்ளது. இது வடிவியல் அமைப்புடன் உள்ளது. இம்மனித உருவத்தின் வயிற்றுப் பகுதியிலிருந்து கயிறு போன்ற ஒன்று நீண்டுள்ளது. அது மறுமுனையில் வட்டமான ஒன்றோடு இணைக்கப்பட்டுள்ளது. இக்காட்சி எதனை விளக்குகிறது என்று அறிய முடியவில்லை. இதேப் பாறையின் மற்றோர் இடத்தில் மனித உருவம் ஒன்று விலங்கின் மேல் ஏறி வருவதாக உள்ளது. இதில் காட்டப்படும் விலங்கு குதிரையாக இருக்க வாய்ப்புண்டு. இரண்டு உருவங்களுமே சிவப்பு வண்ணத்தில் கோட்டோவியமாகக் காணப்படுகின்றன. அதுபோல மற்றோர் இடத்தில் கைகோத்த நிலையில் இரண்டு மனித உருவங்கள் நடந்து வருவது போல ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதில் தலைப்பகுதி, குச்சியான கோடுகளால், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருப்பது போல உள்ளது. இவ்வோவியங்களும் அடர் சிவப்பு வண்ணத்தில் முழுமையான கோட்டோவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. மூன்று மனித உருவங்கள் கைகோத்து நடனமாடும் நிலையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த உருவங்கள் சித்தரிக்கப்பட்ட விதத்தைக் கொண்டு இது வட்ட வடிவமான நடனமாக (Circular dance) இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இங்குள்ள மூன்று உருவங்களில் முதலாவது உருவத்தில் புறக்கோடுகளால் உருவம் வரைந்து பின் வண்ணம் நிரப்பப்பட்டுள்ளது. இரண்டாவது உருவத்தில் குறைந்த அளவில் உருவத்துக்குள் வண்ணம் நிரப்பப்பட்டுள்ளது. மூன்றாவது உருவம் கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது. இதன்மூலம் ஓவியன் மூன்று உருவங்களையும் மூன்று விதமாக வரைய முற்பட்டது தெரிய வருகிறது. இம்மலையின் அடிப்புறத்தில் உள்ள பாறை ஒன்றில் மிக அலங்காரமான மனித உருவம் காணப்படுகிறது. நீள் வட்டத் தலையில் நீண்ட மரக்கிளை போன்ற அலங்காரக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. உடல் பகுதி, இரண்டு முக்கோணங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. உடலின் உட்பகுதி குறுக்குக் கோடுகளால் நிரப்பப்பட்டுள்ளது. இடக்கையில் கயிற்றின் ஒரு முனை உள்ளது. மற்றொரு முனை அடையாளம் தெரியாத விலங்கொன்றின் கழுத்தில் கட்டப்பட்டுள்ளது. இம்மலையில் ஓவியங்கள் அதிக இடங்களில் வரையப்பட்டிருப்பினும் சில இடங்களில் கற்கீறல்களும் காணப்படுகின்றன. அவை உளி கொண்டு செதுக்கியது போல உள்ளதால் அவை இரும்புக் காலத்துக்குப் பின்னர் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இங்குள்ள ஓவியங்கள் காட்சியின் அடிப்படையிலும், வரைவு முறையின் அடிப்படையிலும், புதிய கற்காலம் மற்றும் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஓவியர்களால் வரையப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகின்றன. இங்கு வரையப்பட்ட பெரும்பாலான மனித உருவங்கள் ஒத்த தன்மை உடைய கோட்டோவியமாகவே தீட்டப்பட்டுள்ளன. இங்குள்ள ஓவியங்களில் மனிதர்களும், விலங்குகளும், விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான உறவுகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிவகங்கையிலிருந்து 21 கி.மீ. மேற்கில் அமைந்துள்ள இந்தத் திருமலைக் குன்றில் தமிழ் – பிராமிக் கல்வெட்டுகளும், சமணத் தடயங்களும், பிற்காலச் சிவன் கோவிலும், வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்களும் ஒருங்கே காணப்படுகின்றன.
தகவல்
க.த.காந்திராஜன்
மீடியா கோப்புகள் இல்லை