Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

கயிலாய கீழ சொக்கநாதர் கோயில்

Kailaya Keezh Chokkanāthar Temple

அமைவிடம்

போடிநாயக்கனூர், முந்தல் கிராமத்தில் இருந்து குரங்கணிக்குச் செல்லும் சாலையில் பிச்சாங்கரையில் உள்ளது.


ஊர்

பிச்சாங்கரை

மாவட்டம்

தேனி

மூலவர் பெயர்
கயிலாய கீழ சொக்கநாதர்
தல மரம்
வில்வம்
கோயில் குளம்/ஆறு
கொட்டக்குடி ஆறு
பூசைக்காலம்

நாள்தோறும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை வழிபாடு நடைபெறும்.

திருவிழாக்கள் விவரங்கள்

சிவராத்திரி, அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷ நாட்களில் சிறப்புப் பூசைகள் நடைபெறும்.

கல்வெட்டு / செப்பேடு

பிற்காலப் பாண்டியர் காலக் கல்வெட்டு உள்ளது.

சிற்பங்கள்
விநாயகர்
கோயில் அமைப்பு

சிதைந்த நிலையில் இருந்த இக்கோயில் சீரமைக்கப்பட்டிருக்கிறது. விமான அமைப்பு இப்போது காணப்படவில்லை. கருவறையும் அர்த்த மண்டபமும் எஞ்சியுள்ளன. அண்மைக்காலத்தில் கோயிலின் முன்பகுதியில் கூடாரம் போன்ற அமைப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது.

கூடுதல் விவரங்கள்

பிற்காலப் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் கொட்டக்குடி ஆற்றின் வடக்குக் கரையில் மாமரங்கள் சூழ்ந்த இயற்கையான வனப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவரான ’கைலாய கீழ சொக்கநாதர்’, கருவறையில் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். லிங்கத்தின் ஆவுடையார் சதுர வடிவில் உள்ளது. கோயிலின் கருவறையும் அர்த்தமண்டபமும் சிதைந்த நிலையில் உள்ளன. கருவறையின் வெளிப்புறமுள்ள தேவகோட்டங்களில் சிற்பங்கள் ஏதுமில்லை. இக்கோயில் சிவலிங்கம் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்கிறார்கள். எனினும், கோயிலின் கட்டுமானம் மற்றும் கல்வெட்டின் அடிப்படையில், இது பிற்காலப் பாண்டியரால் கட்டப்பட்ட கோவிலாகும்.

காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 13 -14ஆம் நூற்றாண்டு
தல வரலாறு / கதைகள்

இந்த சிவாலயம் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களாளும் மகான்களாலும் தோற்றுவிக்கப்பட்டு வழிபடப்பட்டு வருவதாக தலவரலாற்றில் சொல்லப்படுகிறது. கண்ணகி மதுரையை எரித்த பிறகு, உண்மைக்கும் நீதிக்கும் கட்டுப்பட்ட சொக்கநாதர் மதுரையில் இருந்து புலம்பெயர்ந்து இங்கு வந்து பிச்சாங்கரைக் குளம் அருகே வீற்றிருக்கிறார் என்று இப்பகுதி மக்களால் கூறப்படுகிறது. இக்கோயிலின் அருகில் கண்ணகி அம்மனுடைய கோயிலும் இருக்கிறது. பொ.ஆ. 13 -14ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் வீரபாண்டியன் தனது அமைச்சர் தென்னவன் தமிழவேள் மூலம் இச்சிவனுக்கு ஆலயம் எழுப்பித் துறையூர் நாடாளுவான் என்ற ஊர்த் தலைவரிடம் நிர்வாகத்தையும் ஒப்படைத்துக் கோயிலுக்கு மானியமாக நிலங்களையும் வழங்கி உள்ளார். பின்னர் பொ.ஆ. 1376 ஆம் ஆண்டு முதல் போடிநாயக்கனூர் ஜமீன்தாருடைய நிர்வாகத்தின் கீழ் இக்கோயில் வந்துள்ளது.

தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்

இக்கோயிலுக்கு மேற்கு பக்கமாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மேல சொக்கநாதன் என்ற பெயரில் ஒரு சிறு ஆலயம் இருக்கிறது மற்றும் இதற்கு வடக்கு பக்கமாக பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கற்த்திட்டைகள் உள்ளன.

செல்லும் வழி

போடிநாயக்கனூரில் இருந்து முந்தல் சென்று அங்கிருந்து குரங்கணி செல்லும் சாலை வழியாக இந்தக் கோயிலுக்குச் செல்லலாம்.

அருகிலுள்ள பேருந்து நிலையம்

போடிநாயக்கனூர்

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்

போடிநாயக்கனூர்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

தங்கும் வசதி
போடிநாயக்கனூர்
புகைப்படங்கள்

மு.அகிலன்

மு.அகிலன்

மு.அகிலன்